இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் தனது பெயர் இடம்பெறாதது நியாயமான முடிவு என இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தத் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸின் பெயர் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் தனது பெயர் இடம்பெறாதது நியாயமான முடிவு என கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெறாதது கலவையான உணர்வுகளைக் கொடுத்தது. ஒரு தொடருக்கு அணி அறிவிக்கப்படும்போது உங்களது பெயர் அணியில் இடம்பெற வேண்டும் என நினைப்பீர்கள். ஆனால், அதே நேரத்தில் எனது வயது, வெளிநாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் எனது பங்களிப்பு குறிப்பாக இந்தியாவில் எனது செயல்பாடுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். அதனால், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு நியாயமானது என நான் உணர்கிறேன் என்றார்.
இதையும் படிக்க: கிரிக்கெட் மீதான ஈடுபாடு குறைந்துவிட்டது: ஆசாத் ஷஃபிக்
கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய கிறிஸ் வோக்ஸ் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.