ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் மும்பை வீரர் பிருத்வி ஷா, முச்சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
குவாஹாட்டியில் மும்பை - அஸ்ஸாம் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற அஸ்ஸாம் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் மும்பை அணி, 2 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் எடுத்தது. பிருத்வி ஷா 240, ரஹானே 73 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்தப் பருவத்தில் பிருத்வி ஷா எடுத்துள்ள முதல் சதம் இது. முதல் தர கிரிக்கெட்டில் இதற்கு முன்பு அவர் 202 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
இந்நிலையில் 2-வது நாளான இன்று முச்சதத்தைப் பூர்த்தி செய்து சாதனை படைத்தார் பிருத்வி ஷா. 383 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 49 பவுண்டரிகளுடன் 379 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரஞ்சி கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த 2-வது வீரர், அதிக ரன்கள் எடுத்த மும்பை வீரர் என்கிற சாதனைகளைப் படைத்துள்ளார். இதற்கு முன்பு, மும்பை அணிக்காக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அதிகபட்சமாக 377 ரன்கள் எடுத்திருந்தார். ரஞ்சி கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைக் கொண்டவர், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த நிம்பல்கர். 1948-49-ல் கதியவாருக்கு எதிராக 443 ரன்கள் எடுத்தார். அதற்கடுத்த இடத்தில் பிருத்வி ஷா உள்ளார்.
23 வயது பிருத்வி ஷா, இந்திய அணிக்காக 2018 முதல் 5 டெஸ்டுகள், 1 டி20, 6 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக ஜூலை 2021-ல் விளையாடினார்.