
மும்பைக்கு எதிராக முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் ஷுப்மன் கில்லின் அதிரடி சதத்தால் 3 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் குவித்துள்ளது.
குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட் செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் விருத்திமான் சஹா களமிறங்கினர். இந்த இணை சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இருப்பினும், சஹா 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் சாய் சுதர்சன், ஷுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். சாய் சுதர்சன் நிதானமாக விளையாட ஷுப்மன் கில் அதிரடியாக மைதானத்தின் நாலாபுறங்களிலும் பந்தினை பறக்கவிட்டார். ஷுப்மன் கில்லின் அதிரடியான ஆட்டத்தினை மும்பை பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு ஓவருக்கும் பந்துகள் பவுண்டரிகளை நோக்கி பறந்த வண்ணமே இருந்தன. அதிரடியாக விளையாடிய ஷுப்மன் கில் 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 60 பந்துகளில் 129 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன்பின் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹார்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி ஸ்கோரினை உயர்த்தினார். சாய் சுதர்சன் 43 ரன்கள் குவித்தார். ஹார்திக் பாண்டியா 13 பந்துகளில் 28 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் பியூஸ் சாவ்லா மற்றும் ஆகாஷ் மத்வால் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து, 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.