இங்கிலாந்து அணியின் தொடர்ச்சியான தோல்விகள் ஏமாற்றத்தை அதிகப்படுத்துகிறது என அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் அகமதாபாத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 286 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்த போதிலும் இங்கிலாந்து அணியால் வெற்றியை வசப்படுத்த முடியவில்லை. இந்தப் போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் இங்கிலாந்து தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வியின் மூலம் உலகக் கோப்பை நடப்பு சாம்பியன் என்ற பெருமையும் முடிவுக்கு வந்தது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது.
இதையும் படிக்க: இதுதான் எனது திருப்திகரமான ஒருநாள் போட்டி: ஆடம் ஸாம்பா
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் தொடர்ச்சியான தோல்விகள் ஏமாற்றத்தை அதிகப்படுத்துகிறது என அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எங்களது நம்பிக்கை உடைந்துவிட்டதாக நான் கூறமாட்டேன். தொடர்ச்சியான தோல்விகள் ஏமாற்றத்தை அதிகப்படுத்துகிறது. நான் ஏற்கனவே கூறியது போல இங்கிலாந்து அணியில் தரமான வீரர்கள் இருக்கிறார்கள். எங்களிடம் தரமான வீரர்கள் இருந்தும், நாங்கள் வெற்றி பெற தவறுகிறோம். என்னுடைய ஃபார்ம் மீது உண்மையில் எப்போதும் இல்லாத அளவுக்கு எனக்கு நம்பிக்கை உள்ளது. இருப்பினும், அதிக ரன்கள் குவிக்க முடியாதது ஏமாற்றமளிக்கிறது.
இந்தியாவில் நான் பல போட்டிகளில் விளையாடியுள்ளேன். ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளேன். இருந்தும், பேட்டிங்கில் சிறந்த பங்களிப்பை அளிக்க முடியாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. கேப்டன்சியினால் எனது பேட்டிங் பாதிக்கப்படுவதாக நான் நினைக்கவில்லை. கேப்டன்சி எனது பேட்டிங்கின் பொறுப்பை அதிகப்படுத்தி பல சிறந்த விஷயங்களை எனக்கு அளித்திருக்கிறது என்றே கூறுவேன் என்றார்.