சர்வதேச கிரிக்கெட்டில் வீரர் ஒருவர் தாமதமாக களமிறங்கியதற்காக அவுட் கொடுக்கப்பட்டுள்ள அரிதான சம்பவம் நடப்பு உலகக் கோப்பையில் அரங்கேறியுள்ளது.
உலகக் கோப்பையில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் இலங்கை முதலில் பேட் செய்து வருகிறது. இப்போட்டியில் தாமதமாக களமிறங்கிய இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸுக்கு நடுவர்கள் அவுட் கொடுத்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தாமதமாக களமிறங்க வந்ததற்காக அவுட் கொடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
வீரர் ஒருவர் ஆட்டமிழந்த பிறகு 3 நிமிடத்துக்குள் அடுத்த வீரர் களமிறங்க வேண்டும். ஆனால், 3 நிமிடத்துக்குள் ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கத் (பேட் செய்ய) தவறியதால் அவருக்கு நடுவர்கள் டைம் அவுட் முறையில் அவுட் கொடுத்தனர்.
தாமதம் ஏன்?
இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தவறான தலைக்கவசத்தை (ஹெல்மட்) எடுத்து வந்துள்ளார். அதனை உணர்ந்த மேத்யூஸ் சரியான ஹெல்மட் வருவதற்காக காத்திருந்தார். அவரது இந்த செயலால் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து, வங்கதேச அணியினர் டைம் அவுட் முறையில் விக்கெட் கொடுக்க முறையிட்டனர். நடுவர்கள் மற்றும் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசனிடம் மேத்யூஸ் விளக்கம் அளித்தும் அவர்கள் அதை ஏற்க மறுத்தனர். இதனால் மேத்யூஸ் டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.