நெதர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் 160 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஏற்கெனவே இந்திய அணி 8 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், இன்று (நவம்.12) பெங்களூரின் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் தான் ஆடிய அனைத்து லீக் ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. அதையடுத்து பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 124 ரன்களும், கே.எல்.ராகுல் 102 ரன்களும் எடுத்தனர்.
நெதர்லாந்து அணியின் சார்பில் லீட் 2 விக்கெட்களையும், மெக்கரீன் மற்றும் மெர்வே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
411 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி இரண்டாவது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது. 47.5 ஓவர்களில் 250 ரன்கள் மட்டுமே எடுத்து, 160 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் சார்பில் முகமது சிராஜ், பும்ரா, குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரின் 9 லீக் ஆட்டங்களில் பங்கேற்ற இந்திய அணி 9 போட்டியிலும் வெற்றி பெற்று, தோல்வியே காணாத அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
நவம்.15-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் அரையிறுதியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது இந்திய அணி.