இந்திய அணிக்கு உண்மையில் பலவீனம் என்பதே இல்லை என ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் வெற்றிக்குப் பிறகு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடினோம். அந்தத் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியாவிடம் தோல்வியடைந்தோம். இருப்பினும், இந்தியாவுக்கு எதிராக பலமுறை விளையாடியுள்ளது எங்களுக்கு உதவும். இந்திய அணியைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் மிகவும் தரமான அணி. நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பலவீனம் என்று பெரிதாக எதுவும் இல்லை. அவர்களுக்கு எதிராக இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளதை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்றார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப்போட்டி நாளை மறுநாள் (நவம்பர் 19) அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.