கிரிக்கெட் மாஃபியாவா பிசிசிஐ? வைரலான ரிக்கி பாண்டிங் கருத்து போலி!

இந்திய கிரிக்கெட் வாரியத்தை(பிசிசிஐ) கிரிக்கெட் மாஃபியா என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாக வைரலான செய்தி போலி எனத் தெரியவந்துள்ளது.
ரிக்கி பாண்டிங்(கோப்புப்படம்)
ரிக்கி பாண்டிங்(கோப்புப்படம்)

இந்திய கிரிக்கெட் வாரியத்தை(பிசிசிஐ) கிரிக்கெட் மாஃபியா என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாக வைரலான செய்தி போலி எனத் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதமாக நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று நிறைவடைந்தது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக சாம்பியன் ஆனது.

நடப்பு தொடர் முழுவதும் தோல்வியே பெறாமல் வெற்றிப் பாதையில் பயணித்த இந்திய அணியின் பேட்டர்களையும், பவுலர்களையும் ஆஸ்திரேலிய வீரர்கள் இறுதிப் போட்டியில் திணறடித்தனர்.

இந்த நிலையில், “இது கிரிக்கெட் மாஃபியாவுக்கு எதிரான வெற்றி. உங்கள் பணமும், அதிகாரமும் கோப்பையை பெற்றுத்தராது” என்று ரிக்கி பாண்டிங் ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்ததாக இணையதளத்தில் வைரலானது.

பல்வேறு தரப்பினர் இன்று காலைமுதல் ரிக்கி பாண்டிங் பேசியதாக கூறப்படும் இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தனியார் உண்மை கண்டறியும் நிறுவனம் நடத்திய ஆய்வில், ரிக்கி பாண்டிங் இதுபோன்ற கருத்தை பதிவு செய்யவில்லை எனத் தெரியவந்துள்ளது.

மேலும், வர்ணனையில் ஈடுபட்ட ரிக்கி பாண்டிங், “இந்தியாவுக்கு சாதகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மைதானம், அவர்களுக்கே பாதகமாக அமைந்துவிட்டது” என்று தெரிவித்ததாகதான் ஃபாக்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com