வெளிநாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்க காலம் தாழ்த்துவதால் பாகிஸ்தான் வீரர்கள் பலர் அந்நாட்டு கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் மீது அதிருப்தியில் உள்ளனர்.
இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்தாவது: பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் வஹாப் ரியாஸ் மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே வெளிநாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான அனுமதி வழங்கும் விஷயத்தில் அதிருப்தி நிலவுகிறது. இந்த அதிருப்தியின் காரணமாகவே பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் இமாத் வாசிம் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
பாகிஸ்தான் அணிக்காக விளையாடும் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வுக்குழுத் தலைவர் வஹாப் ரியாஸ் தெரிவித்துள்ளார். அதேபோல பாகிஸ்தானின் தேசிய அணியில் இடம்பெற வேண்டும் என விரும்புபவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாடுவதற்காகவே இமாத் வாசிம் ஓய்வு முடிவை அறிவித்ததாக ரியாஸ் கூறினார். இமாத் உட்பட சில வீரர்களுக்கு அபு தாபியில் நடைபெறும் டி10 லீக் போட்டிகளில் விளையாட அனுமதி அளிக்கும் முடிவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்னும் முடிவு எடுக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இவரைப் போன்று பந்துவீசியவரை பார்த்ததே இல்லை: மார்னஸ் லபுஷேன்
உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படத் தவறிய பாகிஸ்தான் அணிக்கு அண்மையில், புதிய தேர்வுக் குழுத் தலைவர், புதிய உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.