மும்பை இண்டியன்ஸில் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
இந்தியன் ப்ரீமியர் லீக் 2024 தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிச. 19-ஆம் தேதி துபையில் நடைபெறவுள்ளது. இதற்கிடையே அணிகள் வீரா்களை தக்க வைக்கவும், விடுவிக்கவும் நவ. 26-ஆம் தேதி மாலை 5 மணி அவகாசம் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை அனைத்து ஐபிஎல் அணிகளும் தாங்கள் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்துக் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டனர்.
இதில், மும்பை இண்டியன்ஸில் அணி பும்ராவை தக்கவைத்துக் கொண்டதாக தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, ஐபிஎல் அணிகளிடம் இருந்து டிரேடிங் முறையில் நேரடியாக வீரர்களை வாங்கிக் கொள்ளும் முறை டிசம்பர் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹார்திக் பாண்டியாவை அந்த அணியிடம் இருந்து டிரேடிங் முறையில் மும்பை இண்டியன்ஸில் அணி நேற்று வாங்கியது.
இந்த நிலையில், பும்ரா இன்று வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “சில நேரங்களில் அமைதியே சிறந்த பதில்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை சமூக வலைதளங்களில் பகிரும் பும்ராவின் ரசிகர்கள், மும்பை அணியிலிருந்து வேறு அணிக்கு அவர் டிரேடிங் செய்யப்படவுள்ளதாக பதிவிட்டு வருகின்றனர்.
அதேபோல், மும்பை இண்டியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கங்களை பும்ரா பின்தொடர்வதை நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த செய்தி குறித்து பும்ரா மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணியின் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
மும்பை இண்டியன்ஸ் அணியின் வெற்றிக்கு பலமுறை முக்கிய காரணமாக அமைந்துள்ள பும்ரா, அந்த அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.