ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 போட்டியில் முதல் சதமடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ருதுராஜ் கெய்க்வாட் பெற்றார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், நேற்று குவாஹாட்டியில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 222 குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டியது.
இந்தப் போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்த ருதுராஜ் கெய்க்வாட் 57 பந்துகளில் 123 ரன்கள் (13 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள்) குவித்து சர்வதேச டி20-யில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
இதன்மூலம், சர்வதேச டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் சதத்தை பதிவு செய்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
மேலும், சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன் எடுத்த இரண்டாவது வீரர்(ஷுப்மன் கில் 126 முதலிடம்), கடைசி 3 ஓவர்களில் அதிகபட்ச ரன்கள்(52) எடுத்த இரண்டாவது வீரர்(யுவராஜ் சிங் 54 முதலிடம்) என்ற சாதனைகளை படைத்தார்.