ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ரசிகர்கள் வீசிய தேசியக் கொடியை கீழே விழாமல் தாவிப் பிடித்தார். இந்த விடியோ இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
ஆசிய விளையாட்டு ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு நேற்று (அக். 5) தங்கம் - வெள்ளி ஆகிய இரு பதக்கங்களும் கிடைத்தன.
இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 88.88 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். அதற்கு அடுத்தபடியாக கிஷோர் குமார் ஜெனா 87.54 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து 2ஆம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இதன்மூலம் நடப்பாண்டு ஆசிய விளையாட்டு ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் - வெள்ளி என இரு பதக்கங்கள் கிடைத்தன.
இந்தியாவின் வெற்றியைத் தொடர்ந்து போட்டி நடைபெற்ற திடலில் கூடியிருந்த ரசிகர்கள், நீரஜ் சோப்ராவுக்காக தேசியக்கொடியை வீசி எறிந்தனர். கொடி இலகுவாக இருந்ததால், அது கீழே விழ நேர்ந்தது. இதனை அறிந்து துரிதமாக செயல்பட்ட நீரஜ், தாவி தேசியக் கொடியைப் பிடித்தார். பின்னர் அங்கிருந்த மற்ற வீரர்களுடன் தேசியக்கொடியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்த விடியோ இன்று இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.