ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கவுள்ள நிலையில் சிறப்பு கவன ஈர்ப்பு சித்திரத்தை கூகுள் வெளியிட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 50 ஓவர்கள் ஒருநாள் உலகக் கோப்பை நடத்துகிறது. இந்த போட்டியின் 13-வது எடிஷன் இன்றுமுதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது.
ஏற்கெனவே வெவ்வேறு நாடுகளுடன் இணைந்து மூன்று முறை உலக கோப்பை போட்டியை இந்தியா நடத்தியுள்ளது. இந்த முறை தன்னந்தனியாக இந்தியா மட்டும் நடத்துகிறது.
மொத்தம் 48 நாள்கள் நடைபெறும் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியே, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன.
அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்கவுள்ள முதல் போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், உலகக் கோப்பை போட்டியை சிறப்பிக்கும் வகையில் ‘டூடுல்’ எனப்படும் கவன ஈர்ப்புச் சித்திரத்தை கூகுள் வெளியிட்டுள்ளது.