டெங்கு காய்ச்சலில் இருந்து மீண்டுள்ள இந்திய அணியின் ஷுப்மன் கில் இன்று (அக்டோபர் 12) வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.
இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் அண்மையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். உலகக் கோப்பை தொடங்கும் நேரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை. இதற்கிடையில் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்த ஷுப்மன் கில் குணமடைந்தார். இந்திய அணி நாளை மறுநாள் (அக்டோபர் 14) பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இதையும் படிக்க: முடிவுகளை எதிர்பார்த்து நான் பந்துவீசுவதில்லை: ஜஸ்பிரித் பும்ரா
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்துக்குச் சென்று ஷுப்மன் கில் இன்று (அக்டோபர் 12) பேட்டிங் பயிற்சி மேற்கொண்டுள்ளது அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
காலை 11 மணிக்குப் பிறகு போட்டி நடைபெறும் நரேந்திர மோடி மைதானத்துக்கு வந்த ஷுப்மன் கில் ஓட்டப் பயிற்சிகள் மேற்கொண்டார். அதன்பின் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது வலைப்பயிற்சியில் பந்துவீசும் பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் அவர் எதிர்கொண்டு விளையாடினார். அவரது இந்தப் பயிற்சிகள் அனைத்தும் இந்திய அணியின் மருத்துவர் ரிஸ்வான் கண்காணிப்பிலேயே நடைபெற்றது. வலைப்பயிற்சியில் ஷுப்மன் கில் எந்த ஒரு அசௌகரியமும் அடையவில்லை. இந்தப் பயிற்சி நீண்ட நேரம் நீடித்தது.
இதையும் படிக்க: இந்தியா - பாகிஸ்தான் போட்டி: காசாக்கப்படும் வெறுப்பு அரசியல்?
இந்தியா - பாகிஸ்தான் போட்டியானது நண்பகல் 2 மணிக்குத் தொடங்குவதால் டெங்கு காய்ச்சலில் இருந்து மீண்டு வந்துள்ள ஷுப்மன் கில்லின் உடல்நிலை கடும் வெயிலில் எப்படி செயல்படுகிறது என்பதை பரிசோதிக்கவே நண்பகலில் நீண்ட நேர வலைப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.