உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவின் அடுத்தடுத்த தோல்வி குறித்துப் பேசிய ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன், இது வெறும் ஆரம்பம் மட்டுமே முடிவு அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்ட தோல்வியே புள்ளிப்பட்டியலில் அந்த அணியின் பின்னடைவுக்கு காரணம். உலகக் கோப்பை தொடர்களில் மிகவும் வெற்றிகரமான அணியாக வலம் வரும் ஆஸ்திரேலிய அணிக்கு இந்த தொடர் தோல்விகள் சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற அந்த அணி மீதமுள்ள 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.
இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவின் அடுத்தடுத்த தோல்வி குறித்துப் பேசிய ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன், இது வெறும் ஆரம்பம் மட்டுமே முடிவு அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: புள்ளிப்பட்டியல் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நாங்கள் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளோம். அப்படி வெற்றி பெற்றால் மட்டுமே புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் வர முடியும். நாங்கள் அழுத்தமான சூழலில் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். அதனால்தான் 5 உலகக் கோப்பைகளை வென்றுள்ளோம். நாங்கள் இந்த உலகக் கோப்பைத் தொடரில் சிறந்த தொடக்கத்தை தரவில்லை. ஆனால், இது வெறும் ஆரம்பம் மட்டுமே, முடிவு அல்ல.
இதையும் படிக்க: 123 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட்!
நாங்கள் முதல் இரண்டு போட்டிகளில் எங்களது செயல்பாடுகள் குறித்து ஏமாற்றமடைந்திருக்கலாம். நிறைய விஷயங்கள் ஏமாற்றத்தை கொடுத்திருக்கலாம். ஆனால், அதை நினைத்து அப்படியே எங்களால் இருந்துவிட முடியாது. அடுத்த போட்டிக்காக தயாராக வேண்டும். மூன்று நாள்களில் இலங்கையுடன் அடுத்தப் போட்டி உள்ளது. நான் எங்களது தோல்விகளுக்கு காரணம் சொல்லிக் கொண்டிருப்பதற்காக இங்கு வரவில்லை. எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் ஆட்டத்துக்குள் வரவேண்டும் என்றார்.