அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த காலங்களில் விளையாடிய அனுபவம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட உதவியதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று (அக்டோபர் 14) அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா சிறப்பாக பந்துவீசினார். 7 ஓவர்கள் வீசிய அவர் வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த காலங்களில் விளையாடிய அனுபவம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட உதவியதாக ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த அகமதாபாத் மைதானத்தில் நான் நிறைய ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளேன். இந்த மைதானத்தில் விளையாடிய அனுபவத்தில் கற்றுக்கொண்ட விஷயங்களை போட்டியின்போது செயல்படுத்த முயற்சி செய்தேன். பேட்ஸ்மேன் நான்கு பவுண்டரி அடிப்பதற்கு முன் முதல் பவுண்டரிக்குப் பிறகே விக்கெட்டின் தன்மையை உணர வேண்டியது மிகவும் அவசியம். அதனையே நான் செயல்படுத்தினேன் என்றார்.