விளையாட்டிலிருந்து விடைபெற்றுவிட்ட புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் விரைவில் இரு தன் வரலாற்று நூல்களை எழுதப் போகிறார்.
இதுதொடர்பாக ரேண்டம் ஹவுஸ் பதிப்புக் குழுமத்துடன் செரீனா உடன்பாடு செய்துகொண்டுள்ளார்.
தன்னுடைய தனிப்பட்ட, அந்தரங்கமான நினைவுகளையும் திறந்த மனதுடன் எழுதவிருப்பதாகக் கூறப்படும் இந்த நூலில், குழந்தைப் பருவ நினைவுகள் தொடங்கி எல்லாவற்றையும் அவர் கூறவிருக்கிறார்.
தொடக்க கால டென்னிஸ் பயிற்சி, அசாதாரணமான தன்னுடைய பயணத்தில் நேரிட்ட தடைகள், பின்னடைவுகள் பற்றியெல்லாமும் தெரிவிக்கவுள்ள இந்த நூலுக்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்படவில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் செரீனாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது.
நீண்ட காலமாக வெற்றி என்பதை மட்டுமே இலக்காக ஓடிக்கொண்டிருந்தேன். கொஞ்சம் அமர்ந்து, வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க நேரமில்லை என்று குறிப்பிட்டுள்ளார் செரீனா வில்லியம்ஸ்.
இன்னமும் தலைப்பிடப்படாத இரண்டாவது நூலில் பொது வாழ்க்கை அனுபவங்களை, வழக்கறிஞராக, முதலீட்டாளராக, இளம் பெண்களின் ஊக்குவிப்பாளராக எழுதவிருக்கிறார் செரீனா.
இதையும் படிக்க: உலகக் கோப்பை: இலங்கை அணியுடன் இணையும் இரு மூத்த வீரர்கள்!
42 வயதான செரீனா வில்லியம்ஸ், 2022 யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டிக்கு சற்று முன், தொழில்முறைப் போட்டிகளில் விளையாடுவதில்லை என்ற முடிவை, தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.
ஒற்றையர் ஆட்டங்களில் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள், சகோதரி வீனஸ் வில்லியம்ஸுடன் இணைந்து இரட்டையர் ஆட்டங்களில் 14 பட்டங்கள், 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் பெற்றவர் செரீனா வில்லியம்ஸ்.