ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆடும் லெவனில் இடம்பெறுவதற்கான தேர்வில் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெறமாட்டார்கள் என பாகிஸ்தான் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பையில் நாளை (அக்டோபர் 20) பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்த உலகக் கோப்பையில் இரு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளன. ஆஸ்திரேலியா ஒரு வெற்றியையும், பாகிஸ்தான் இரண்டு வெற்றிகளையும் பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் 4-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 7-வது இடத்திலும் உள்ளது.
இதையும் படிக்க: உலகக் கோப்பை: இலங்கை அணியுடன் இணையும் இரு மூத்த வீரர்கள்!
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆடும் லெவனில் இடம்பெறுவதற்கான தேர்வில் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெறமாட்டார்கள் என பாகிஸ்தான் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஃபகர் சமான் முழங்கால் காயத்துக்காக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவர் அடுத்த வாரம் அணிக்கான தேர்வுக்கு தயாராக இருப்பார். சல்மான் அலி அகா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவரும் ஆடும் லெவனில் இடம்பெறமாட்டார். பாகிஸ்தான் அணியில் உள்ள மற்ற 15 வீரர்களும் நலமுடன் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபகர் சமான் பாகிஸ்தானுக்காக இந்த உலகக் கோப்பையில் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே களமிறங்கியுள்ளார். நெதர்லாந்துக்கு எதிரான பாகிஸ்தானின் முதல் போட்டியில் களமிறங்கிய அவர் 12 ரன்கள் எடுத்தார். அதன்பின், அப்துல்லா சஃபீக் பாகிஸ்தான் அணிக்காக கடந்த இரண்டு போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். அவர் இலங்கைக்கு எதிராக 113 ரன்களும், இந்தியாவுக்கு எதிராக 20 ரன்களும் எடுத்தார்.