

பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னரின் சதங்களால் 367 ரன்கள் குவித்துள்ளது.
உலகக் கோப்பையில் பெங்களூருவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது.
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். இந்த இணை ஆஸ்திரேலிய அணிக்கு அபாரமான தொடக்கத்தைத் தந்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். ஆஸ்திரேலிய அணி 259 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது.
மிட்செல் மார்ஷ் 108 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். ஸ்டீவ் ஸ்மித் (7 ரன்கள்), மார்கஸ் ஸ்டொய்னிஸ் (21 ரன்கள்), ஜோஷ் இங்லிஷ் (13 ரன்கள்) மற்றும் மார்னஸ் லபுஷேன் (8 ரன்கள்) எடுத்தும் ஆட்டமிழந்தனர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 124 பந்துகளில் 163 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தான் தரப்பில் ஷகின் அஃப்ரிடி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஹாரிஸ் ரௌஃப் 3 விக்கெட்டுகளையும், உசாமா மிர் ஒரு விக்கெட்டினையும் எடுத்தனர்.
368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.