இத்தனை சதங்கள் அடிப்பேன் என நினைத்ததுகூட கிடையாது: விராட் கோலி
எனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கும்போது இத்தனை ரன்கள் மற்றும் சதங்கள் அடிப்பேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என இந்திய அணியின் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்கள் என தனது சிறப்பான ஃபார்மைத் தொடர்ந்து வருகிறார். கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஒருநாள் போட்டிகளில் அவரது 48-வது சதத்தைப் பதிவு செய்தார். 49 சதங்களுடன் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் தன்வசம் வைத்துள்ளார். கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிரானப் போட்டியில் விராட் கோலி சதமடித்து சச்சினின் இந்த சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது, இருப்பினும், அவர் 5 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இந்த நிலையில், எனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கும்போது இத்தனை ரன்கள் மற்றும் சதங்கள் அடிப்பேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என இந்திய அணியின் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் எனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கும்போது இத்தனை ரன்கள் மற்றும் சதங்கள் அடிப்பேன் என நினைத்துக் கூட பார்த்ததில்லை. இந்த கிரிக்கெட் பயணத்துக்கு கடவுள் என்னை ஆசிர்வதித்துள்ளார். நான் எப்போதும் நிறைய சாதனைகள் செய்ய வேண்டும் என நினைப்பேன். ஆனால், எனது கிரிக்கெட் பயணத்தில் அந்த சாதனைகள் இவ்வாறுதான் இருக்கும் என்று நான் நினைத்ததில்லை. யாராலும் இதனை திட்டமிட முடியாது. இந்த 12 ஆண்டுகளிலில் இத்தனை ரன்கள் மற்றும் சதங்கள் அடிப்பேன் என நினைத்ததில்லை. அணிக்காக எனது சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என நினைப்பேன். என்னுடைய 100 சதவிகித உழைப்பை அதற்காக வழங்குவேன் என்றார்.
இதையும் படிக்க: ஹசரங்கா அணியில் இல்லாதது சவாலாக உள்ளது: மஹீஸ் தீக்ஷனா
விராட் கோலி கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.