பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிக போட்டிகளில் விளையாடாததால் அவர்களின் பந்துவீச்சை எதிர்கொள்வது சவாலானதாக இருந்ததாக இந்திய அணியின் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் விக்கெட்டுகளை இழந்தனர். அந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில் 32 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் இந்திய வீரர்கள் அனைவரின் விக்கெட்டையும் வீழ்த்தி ஆசியக் கோப்பை வரலாற்றில் சாதனை படைத்தனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிக போட்டிகளில் விளையாடாததால் அவர்களின் பந்துவீச்சை எதிர்கொள்வது சவாலானதாக இருந்ததாக இந்திய அணியின் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மற்ற அணிகளுக்கு எதிராக அடிக்கடி கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவது போல பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி அடிக்கடி விளையாடுவதில்லை. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது நம் அனைவருக்கும் தெரியும். அவர்களது பந்துவீச்சுக்கு எதிராக அடிக்கடி விளையாடாதது முக்கியத் தொடர்களில் சவாலாக அமைந்துள்ளது. பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அவர்களுக்கென்று தனிச் சிறப்பு உள்ளது. அவர்கள் மிகவும் வித்தியாசமான வேகப் பந்துவீச்சாளர்கள். அவர்கள் பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.
ஷகின் அஃப்ரிடி பந்தினை அதிகம் ஸ்விங் செய்கிறார். நசீம் வேகத்தில் கவனம் செலுத்தி விக்கெட் எடுக்கிறார். கடந்த போட்டியைப் போல் அல்லாமல் இந்த முறை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இந்திய அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். கேப்டன் ரோஹித் சர்மா உடனான எனது பார்ட்னர்ஷிப் முக்கியமானது. நாங்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 4 போட்டி நாளை (செப்டம்பர் 10) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.