இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனா இந்தியாவுக்கு எதிரான ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதவுள்ளன. பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் இலங்கை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம், இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்றையப் போட்டியில் இலங்கை அணியில் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான மஹீஷ் தீக்ஷனாவுக்கு வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இருப்பினும், அவர் தொடர்ந்து பந்துவீசினார்.
இந்த நிலையில், இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனா இந்தியாவுக்கு எதிரான ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்ததாவது: மஹீஷா தீக்ஷனாவின் வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட உள்ளது. அதன்பிறகு, அவரது உடல்தகுதி குறித்து தெரியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியில் ஏற்கனவே காயம் காரணமாக வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, லகிரு மதுஷங்கா மற்றும் லகிரு குமாரா போன்ற வீரர்கள் அணியில் இல்லை. இந்த நிலையில், மஹீஷ் தீக்ஷனாவுக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி நாளை மறுநாள் (செப்டம்பர் 17) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.