ஸ்டீவ் ஸ்மித் ஃபார்ம் குறித்து ஆஸ்திரேலிய அணி அதிகம் கவலைப்படவில்லை என அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி ரன்களைக் குவிக்கக் கூடிய ஸ்டீவ் ஸ்மித், பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்களில் பெரிய அளவில் ரன் குவிக்கத் தவறினார். அவர் முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிகளில் முறையே 41 ரன்கள் மற்றும் 0 ரன்கள் எடுத்தார். அதேபோல கடந்த பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் இந்தியாவுக்கு எதிராக அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்து கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் ஃபார்ம் குறித்து ஆஸ்திரேலிய அணி அதிகம் கவலைப்படவில்லை என அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டிங் ஃபார்முக்கு அவரது சிறந்த ஆட்டங்களே சான்றாகும். அவர் மிகச் சிறந்த வீரர். அவர் ஆஸ்திரேலிய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனால் அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்து ஆஸ்திரேலிய அணி கவலைப்படவில்லை என்றார்.
முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறாத மிட்செல் ஸ்டார்க் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
இதையும் படிக்க: ஒலிம்பிக் போட்டிகளில் மீண்டும் கிரிக்கெட் இடம்பெறுமா?
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (செப்டம்பர் 27) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.