இந்திய அணியில் 4-வது இடத்தில் விளையாடுவதற்கு விராட் கோலி மிகச் சரியான நபராக இருப்பார் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் யுவராஜ் சிங் ஓய்வு பெற்ற பிறகு அவரது இடத்தை நிரப்புவதற்கான தேடல் தொடங்கியது. ஆனால், அந்த தேடலுக்கு இன்னும் முடிவு வரவில்லை. உலகக் கோப்பை தொடரும் வந்துவிட்டது. உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் 2 மாதங்களுக்கு குறைவான நாள்களே உள்ள நிலையில், இந்திய அணியில் 4-வது இடத்தில் யார் விளையாடப் போகிறார் என்ற கேள்விக்கான ஆலோசனை இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், இந்திய அணியில் 4-வது இடத்தில் விளையாடுவதற்கு விராட் கோலி மிகச் சரியான நபராக இருப்பார் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் அவர் பேசியதாவது: இந்திய அணியில் 4-வது இடத்தில் யார் களமிறங்கப் போகிறார்கள் என்பது குறித்து நாம் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்திய அணிக்காக மிடில் ஆர்டரில் விராட் கோலி களமிறங்கவுள்ளதாக பரவும் வதந்தி குறித்து நான் கேள்விப்பட்டேன். அந்த தகவல் உண்மையாக இருந்தால், நான் அதற்கு மிகப் பெரிய ஆதரவாளராக இருப்பேன். மிடில் ஆர்டரில் களமிறங்குவதற்கு விராட் கோலி மிகச் சரியான தேர்வாக இருப்பார். மிடில் ஆர்டரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய அளவில் ரன்கள் குவிப்பார். அவர் 4-வது இடத்தில் களமிறங்க விரும்புவாரா என்பது எனக்குத் தெரியவில்லை. அவர் 3-வது வீரராக களமிறங்குவதையே விரும்புவார். அந்த இடத்தில் களமிறங்கி அணிக்காக பல சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தியும் இருக்கிறார். ஆனால், அணியின் நலனுக்காக அவர் 4-வது இடத்தில் களமிறங்குமாறு கேட்கப்பட்டால், அவர் அதனை செய்யலாம் என்றே நான் கூறுவேன் என்றார்.
விராட் கோலி இந்திய அணிக்காக 39 இன்னிங்ஸ்களில் 4-வது இடத்தில் களமிறங்கி 1,767 ரன்கள் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.