டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவதற்கான கடும் போட்டியாளராக ரிங்கு சிங் இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இதுவரை முடிவடைந்துள்ள 4 போட்டிகளில் 3 போட்டிகளில் களமிறங்கிய ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார்.
இதையும் படிக்க: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவதற்கான கடும் போட்டியாளராக ரிங்கு சிங் இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் இடம்பெறுவதற்கு கடும் போட்டியாளராக இருப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால், உலகக் கோப்பைக்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ளன. ரிங்கு சிங் களமிறங்கும் இடத்தில் பேட் செய்ய நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடப்பு டி20 தொடரில் ரிங்கு சிங் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஜித்தேஷ் சர்மா மற்றும் திலக் வர்மா சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோரும் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் எந்தெந்த இடங்களில் களமிறங்கிறார்கள் என்பது குறித்து ஆலோசிக்கப்பட வேண்டும். ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் நிச்சயமாக கூற முடியும். ரிங்கு சிங் எதிரணியை அழுத்தமான சூழலுக்கு ஆளாக்குகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரும், ஐபிஎல் தொடரும் நடைபெறவுள்ளது. அதில் ரிங்கு சிங் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பொறுத்து டி20 உலகக் கோப்பையில் அவரது இடம் உறுதியாகும் வாய்ப்பு அதிகரிக்கும் என்றார்.
ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.