சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுவதற்காக ஐபிஎல் போட்டிகளில் இத்தனை ஆண்டுகளாக பங்கேற்கவில்லை என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு முக்கியத்துவம் அளித்தது தனது ஆட்டத்தை மேம்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: முதன்முறையாக ஆஸி.யை வீழ்த்தி சாதனை படைத்த இந்திய மகளிரணி!
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கிரிக்கெட் போட்டியில் ஒரு தொடரில் கவனம் செலுத்துவது சரியானதாக இருந்தது. கிரிக்கெட்டை தவிர்த்து எனது நேரத்தை நான் குடும்பத்துடன் செலவிடுவது, உடலை நன்கு உறுதியாக வைத்துக் கொள்வது போன்ற விஷயங்களுக்காக செலவிட்டேன். என்னால் எந்த அளவுக்கு ஆஸ்திரேலிய அணிக்காக முழு உடல்தகுதியுடன் இருக்க முடியுமோ அந்த அளவுக்கு இருந்தேன். அது குறித்து நான் வருந்தவில்லை. நான் அவ்வாறு இருந்தது எனது டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தியது. பணம் சம்பாதிப்பது என்பது நல்ல விஷயம்தான். ஆனால், நான் சர்வதேசப் போட்டிகளுக்கு முக்கியத்துவமளித்தேன். சர்வதேசப் போட்டிகளுக்கு முக்கியத்துவளித்தது எனது ஆட்டத்தை மேம்படுத்தியதாக நினைக்கிறேன் என்றார்.
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் மிட்செல் ஸ்டார்க் இந்த ஆண்டு ஐபிஎல் மினி ஏலத்தில் ஏலமெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.