ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியடைந்தது.
3-வது டெஸ்ட், தரம்சாலாவில் மார்ச் 1 முதல் நடைபெறுவதாக இருந்தது. தரம்சாலா விளையாட்டுத்திடலில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றதால் டெஸ்ட் ஆட்டம் நடைபெறுவதற்கு உரிய தகுதியைக் கொண்டுள்ளதா என பிசிசிஐ ஆய்வு செய்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் இரு சர்வதேச டி20 ஆட்டங்கள் தரம்சாலாவில் நடைபெற்றன. அதற்குப் பிறகு அத்திடலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வடிகால் வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. வெளிக்களம் இன்னும் தயாராகவில்லை. இதையடுத்து கடந்த பிப்ரவரி 3 அன்று ஆய்வு மேற்கொண்டது பிசிசிஐ. கடந்த வார இறுதியில் இன்னொருமுறை ஆய்வு நடத்தி - டெஸ்ட் ஆட்டம் நடத்துவதற்கான தகுதியைக் கொண்டுள்ளதா, வெளிக்களம் முழுமையாகத் தயாராக உள்ளதா எனப் பரிசோதித்தது.
இந்நிலையில் 3-வது டெஸ்ட், தரம்சாலாவுக்குப் பதிலாக இந்தூரில் நடைபெறும் என பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. மோசமான வெளிக்களம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தூர் டெஸ்ட், மார்ச் 1 அன்று தொடங்கவுள்ளது.
இந்தூரில் கடைசியாக 2019-ல் டெஸ்ட் ஆட்டம் நடைபெற்றது.