ரிஷப் பந்துக்கு மும்பையில் அறுவை சிகிச்சை: பிசிசிஐ அறிவிப்பு
By DIN | Published On : 04th January 2023 03:48 PM | Last Updated : 04th January 2023 03:48 PM | அ+அ அ- |

விபத்தினால் ஏற்பட்ட காயத்துக்காக ரிஷப் பந்துக்கு மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம், ரூா்கியில் உள்ள தனது தாயைப் பாா்க்க தில்லியில் இருந்து ரிஷப் பந்த் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை காரில் சென்றாா். அம்மாநிலத்தின் மங்லௌா் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் ரிஷப் பந்த் படுகாயமடைந்தாா்.
விபத்தை நேரில் பாா்த்த அரசு பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் அவரை மீட்டு ரூா்கியிலுள்ள மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். பின்னா், உயா் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு நெற்றிப்பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்காக ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ செய்யப்பட்டது. இந்த விபத்தில் ரிஷப் பந்தின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டன. விபத்துக்குள்ளான காா் முழுமையாகத் தீப்பிடித்து உருக்குலைந்தது. விபத்தைத் தொடா்ந்து ரிஷப் பந்தின் தாயாரிடம் பேசிய உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி, சிகிச்சை செலவை மாநில அரசு முழுமையாக ஏற்கும் என்றாா். ரிஷப் பந்துக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.
படுகாயங்களுடன் தப்பியுள்ள ரிஷப் பந்துக்கு மருத்துவ சிகிச்சையும், ஓய்வும் தேவை என்பதால் இந்தாண்டின் முதல் பாதியில் அவா் மீண்டும் விளையாட வாய்ப்புகள் மிகக் குறைவு எனப்படுகிறது. எனவே, ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டி, பிப்ரவரியில் தொடங்கும் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் போன்றவற்றில் ரிஷப் பந்த் விளையாட மாட்டாா் எனத் தெரிகிறது.
இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக ரிஷப் பந்த் மும்பைக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில் பிசிசிஐ கூறியதாவது:
ரிஷப் பந்தை மும்பைக்கு மாற்றுவது குறித்த அனைத்து ஏற்பாடுகளையும் பிசிசிஐ செய்துள்ளது. டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ரிஷப் பந்த், ஏர் ஆம்புலன்ஸ் (ஹெலிகாப்டர்) மூலமாக மும்பைக்குக் கொண்டு வரப்படுகிறார்.
மும்பையில் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ரிஷப் பந்த் அனுமதிக்கப்படுவார். அந்த மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவச் சிகிச்சைத் துறையின் தலைவர், மருத்துவர் தின்ஷாவின் மேற்பார்வையில் ரிஷப் பந்துக்குச் சிகிச்சை அளிக்கப்படும். காலில் ஏற்பட்ட தசை நார் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். பிசிசிஐ மருத்துவக் குழுவால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்.
காயத்திலிருந்து விரைவில் மீண்டு வருவதற்கான எல்லா உதவிகளையும் ரிஷப் பந்த்துக்கு பிசிசிஐ வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...