ரஞ்சி கோப்பைப் போட்டியில் தமிழக அணிக்கு எதிராக மும்பை வீரர் சர்ஃபராஸ் கான் சதமடித்துள்ளார்.
மும்பையில் மும்பை - தமிழ்நாடு ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
தமிழக அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. சாய் சுதர்சன், சாய் கிஷோர் டக் அவுட் ஆனார்கள். இதன்பிறகு வரிசையாக விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. கடந்த ஆட்டத்தில் சதமடித்த பிரதோஷ் ரஞ்சன் பால் மட்டும் பொறுப்பாக விளையாடி அரை சதமெடுத்தார். தமிழக அணி 36.2 ஓவர்களில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிரதோஷ் அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார். துஷார் தேஷ்பாண்டே 5 விக்கெட்டுகளையும் ஷம்ஸ் முலானி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். முதல் நாள் முடிவில் மும்பை அணி 41 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று தனது முன்னிலையை அதிகப்படுத்தியுள்ளது மும்பை அணி. சர்ஃபராஸ் கான் சதமடித்து தனது அணி 175 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற உதவியுள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் இது அவருடைய 12-வது சதம். மும்பை அணி 2-வது நாளில் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. தனுஷ் 71 ரன்கள் எடுத்தார். சர்ஃபராஸ் கான் 121 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.