உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி பரிசளிப்பதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கி 2023 போட்டிகள் ஒடிசாவில் நடைபெறவுள்ளன. இதனையொட்டி ஒடிசாவுக்கு வருகைதந்த ஹாக்கி வீரர்களை முதல்வர் நவீன் பட்நாயக் நேரில் சந்தித்து உரையாடினார்.
அப்போது பேசிய அவர், இந்திய ஹாக்கி அணி உலகக் கோப்பையை வென்றால் அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
ஒடிசாவின் ரெளர்கேலா பகுதியில் பிர்சா முண்டா ஹாக்கி திடலை முதல்வர் நவீன் பட்நாயக் இன்று திறந்து வைத்தார். ஒன்பது மாதங்களில் இந்த ஹாக்கி திடல் உருவாக்கப்பட்டுள்ளது. ஹாக்கி உலகக்கோப்பையை முன்னிட்டு அனைத்து வீரர்களின் வசதிக்காக 225 அறைகள் கொண்ட ஹாக்கி கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. ஹாக்கி கிராமத்தில் உலகக் கோப்பையில் பங்குபெறும் அணிகளைச் சேர்ந்த வீரர்கள், பயிற்சியாளர்கள், மருத்துவர்கள் தங்கிக்கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியில் ஒடிசா விளையாட்டுத் துறை அமைச்சர் துஷார்கந்தி பெஹ்ரா, இந்திய ஹாக்கி அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.