இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷானகா அதிரடியால் 206 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று (ஜனவரி 5) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதனையடுத்து, இலங்கை அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் குசல் மெண்டிஸ் களமிறங்கினர். இந்த ஜோடி அதிரடியான தொடக்கத்தைத் தந்தது. இலங்கை அணியின் ரன் ரேட் 10 என்ற சதவிகிதத்திலேயே தொடர்ந்தது. இருப்பினும், பதும் நிசங்கா 33 ரன்களிலும், குசல் மெண்டிஸ் 52 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனைடுத்து, களமிறங்கிய பனுகா ராஜபட்ச 2 ரன்னிலும், தனஞ்ஜெய டி சில்வா 3 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அசலங்கா 19 பந்துகளில் 37 ரன்கள் அதிரடியாக சேர்த்து ஆட்டமிழந்தார். அதில், 4 சிக்ஸர்கள் அடங்கும்.
இலங்கை அணி ஒரு கட்டத்தில் 15.5 ஓவர்களில் 138 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் இலங்கை அணியின் தாசுன் ஷானகா அதிரடியாக விளையாடி இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை திணறடித்தார். அதிரடியாக விளையாடிய அவர் 22 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
கேப்டன் தாசுன் ஷானகா அதிரடியால் இலங்கை அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.