மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பை போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான ஆட்டத்தை 122 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை எளிதாக வீழ்த்திய இந்திய அணி, 2-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொண்டது.
பெனோனியில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மாவும் ஸ்வேதா ஷெராவத்தும் அபாரமான தொடக்கத்தை அளித்தார்கள். இருவரும் சேர்ந்து முதல் 6 ஓவர்களில் 68 ரன்கள் எடுத்தார்கள். அதற்குள் ஷஃபாலி வர்மா 10 பவுண்டரிகள் அடித்திருந்தார். 34 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் அதிரடியாக விளையாடி 78 ரன்கள் எடுத்தார் ஷஃபாலி. இதனால் இந்திய அணி 9 ஓவர்களிலேயே 118 ரன்கள் எடுத்தது. ரிச்சா கோஷ் 29 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஸ்வேதா ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்திய மகளிர் யு-19 அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது.
ஐக்கிய அரபு அமீரக அணி ஆரம்பம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்கத் தடுமாறியது. இதனால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் மட்டும் எடுத்து 122 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. மஹிகா கெளர் அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக ஷஃபாலி வர்மா தேர்வானார்.