இங்கிலாந்து தொடருக்குப் பிறகு எடுத்த ஓய்வினால் தற்போது நன்றாக விளையாடி வருவதாகப் பிரபல பேட்டர் விராட் கோலி கூறியுள்ளார்.
வருடக் கடைசியில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் சதமடித்தார் விராட் கோலி. இதற்கடுத்து விளையாடிய இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரு சதங்கள் என சமீபகாலமாக 4 ஒருநாள் ஆட்டங்களில் 3 சதங்களை அடித்துள்ளார். 2019 நவம்பர் 23 அன்று வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற டெஸ்டில் 136 ரன்கள் எடுத்தார் கோலி. அது அவருடைய 70-வது சதம். 27-வது டெஸ்ட் சதம். அடுத்தச் சதம் எப்போது என்று ரசிகர்கள் 1000 நாள்களுக்கும் அதிகமாகக் காத்திருந்தபோது தான் ஆசியக் கோப்பையில் மீண்டும் சதமடித்து ஆறுதல் அளித்தார்.
திருவனந்தபுரத்தில் ஞாயிறன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் 110 பந்துகளில் 166 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை வென்றார் விராட் கோலி. ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்கள் எடுத்த நிலையில் கோலி 46-வது ஒருநாள் சதத்தை அதற்குள் எடுத்துவிட்டார்.
கடந்த வருடம் இங்கிலாந்து தொடருக்குப் பிறகு ஆசிய கோப்பை தொடங்கும் வரை 42 நாள்கள் ஓய்வு எடுத்தார் கோலி. அதற்கடுத்து 3 ஒருநாள் சதம், 1 டி20 சதம் எனக் குறுகிய காலத்தில் 4 சர்வதேச சதங்களை அடித்துள்ளார். இதுபற்றி கோலி கூறியதாவது:
நீண்ட நாள் ஓய்வுக்குப் பிறகு விளையாட வந்ததில் இருந்து நான் நன்றாக, நம்பிக்கையுடன் விளையாடி வருகிறேன். குறிப்பிட்ட சாதனையை எட்டவேண்டும் என்கிற பதற்றம் என்னிடம் தற்போது இல்லை. என்னுடைய பேட்டிங்கை ரசித்து விளையாட வேண்டும், அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும். அதுதான் எனக்கு முக்கியம். நான் விளையாடும் விதம் எனக்கு செளகரியமாக உள்ளது. நான் நம்பிகையின்றி விளையாடும்போது சில விஷயங்கள் என்னை விட்டு விலகி நிற்கின்றன. என்ன நினைக்கிறேனோ அதைத் தற்போது செய்ய விரும்புகிறேன். எதற்காகவும் நான் போராடவில்லை என்றார்.