ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் ஆட்டங்களை முன்பே ஆரம்பிக்க வேண்டும் என்கிற அஸ்வினின் கருத்துக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒருநாள் ஆட்டங்கள் பகலிரவில் நடைபெறும்போது மாலை 7 மணிக்குப் பிறகு மைதானத்தில் நிலவும் பனிப்பொழிவு காரணமாகப் பந்துவீச்சாளர்களுக்குச் சிரமம் ஏற்படுகிறது. பந்து ஈரமாகி விடுவதால் அவர்களால் நினைத்தபடி பந்துவீச முடிவதில்லை. இந்தப் பிரச்னையால் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் ஆட்டங்களில் 2-வதாக பேட்டிங் செய்யும் அணிகளுக்குச் சாதகமான நிலை ஏற்பட்டு விடுகிறது. இதைத் தடுக்க ஒரு மாற்று யோசனையை முன்வைத்தார் அஸ்வின். ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுவதால் அனைத்து பகலிரவு ஆட்டங்களும் காலை 11.30 மணிக்கு ஆரம்பித்தால் இந்தச் சிக்கல் ஏற்படாது என்றார்.
இந்நிலையில் அஸ்வின் கருத்துக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆதரவு தெரிவித்து கூறியதாவது:
ஆட்டத்தை முன்பே ஆரம்பிப்பது நல்ல யோசனை. ஏனெனில் அது உலகக் கோப்பைப் போட்டி வேறு. டாஸ் விஷயத்தில் மிகவும் சமரசம் செய்துகொள்ளத் தேவையில்லை. அதேசமயம் டாஸை வெல்வதால் கிடைக்கும் பலனையும் ஒரேடியாக விட்டுவிட முடியாது. எனக்கு இந்த யோசனை பிடித்திருந்தாலும் எப்படிச் சாத்தியம் என்று தெரியவில்லை. தொலைக்காட்சியில் ஆட்டங்களை ஒளிபரப்பு செய்பவர்கள் ஆட்டம் எப்போது தொடங்க வேண்டும் என்று முடிவு செய்துகொள்வார்கள். ஓர் அணிக்கு மட்டும் சாதகமான சூழல் இல்லாமல் நல்லவிதமாக கிரிக்கெட் ஆட்டம் நடைபெறவேண்டும் என்றுதான் விரும்புவோம். ஆனால் இதெல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை என்றார்.