ஏழு விக்கெட்டுகள் எடுத்த ஜடேஜா: 133 ரன்களுக்குச் சுருண்ட தமிழ்நாடு அணி!

தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் ஏழு விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார் ஆல்ரவுண்டர் ஜடேஜா.
ஏழு விக்கெட்டுகள் எடுத்த ஜடேஜா: 133 ரன்களுக்குச் சுருண்ட தமிழ்நாடு அணி!

தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் ஏழு விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார் ஆல்ரவுண்டர் ஜடேஜா.

தமிழ்நாடு - செளராஷ்டிர அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாயன்று தொடங்கியது. செளராஷ்டிர அணியின் கேப்டனாக ஜடேஜா செயல்படுகிறார்.

தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 142.4 ஓவர்களில் 324 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திரஜித் 66, விஜய் சங்கர் 53, ஷாருக் கான் 50 ரன்கள் எடுத்தார்கள். காயத்திலிருந்து மீண்டு வந்து முதல்தர கிரிக்கெட்டில் விளையாடும் ஜடேஜா, 24 ஓவர்கள் வீசி 48 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். யுவ்ராஜ்சிங் 4, டிஏ ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். 

3-ம் நாளான இன்று செளராஷ்டிர அணி முதல் இன்னிங்ஸில் 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 6-ம் நிலை வீரராகக் களமிறங்கிய ஜடேஜா, 15 ரன்களுக்கு அபரஜித் பந்தில் ஆட்டமிழந்தார். தமிழக அணியின் எம். சித்தார்த், அஜித் ராம் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 132 ரன்கள் முன்னிலை பெற்றது. 

தமிழ்நாடு அணி 2-வது இன்னிங்ஸில் ஜடேஜாவின் சுழலில் 36.1 ஓவர்களில் 133 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சாய் சுதர்சன் அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார். ஜடேஜா சிறப்பாகப் பந்துவீசி 171. ஓவர்களில் 53 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டிஏ ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார். 

சென்னையில் நடைபெறும் ரஞ்சி கோப்பை ஆட்டத்தை வெற்றி பெற செளராஷ்டிர அணிக்கு 266 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த அணி, 3-ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாளில் வெற்றி பெற செளராஷ்டிர அணிக்கு 262 ரன்கள் தேவைப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com