இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்க அணி.
இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.
புளூம்ஃபாண்டேனில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. வான் டர் டுசென் 111 ரன்கள் எடுத்து அணிக்குப் பெரிதும் உதவினார். மில்லர் 53 ரன்கள் எடுத்தார். சாம் கரண் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இங்கிலாந்து அணிக்கு அருமையான தொடக்கம் கிடைத்தது. முதல் விக்கெட்டுக்கு ஜேசன் ராயும் டேவிட் மலானும் 19.3 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்தார்கள். ஆனால் மலான் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தது திருப்புமுனையாக அமைந்தது. ஜேசன் ராய் 113 ரன்கள் எடுத்தாலும் இதர பேட்டர்களால் 36 ரன்களைத் தாண்ட முடியவில்லை. இதனால் இங்கிலாந்து அணி 44.2 ஓவர்களில் 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.