
டி20 போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ், ஒருநாள் போட்டிகளில் அந்த அளவுக்கு இன்னும் சோபிக்கவில்லை.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான சூர்யகுமார் யாதவ் அவரது பேட்டிங்கை ஒரு நாள் போட்டிகளுக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும் எனப் பலரும் தெரிவித்து வருகின்றனர். இதுவரை 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வெறும் 452 ரன்களே எடுத்துள்ளார். கடைசியாக அவர் விளையாடிய 5 போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 19 ஆகும். அதேபோல அவர் விளையாடிய கடந்த 16 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட எடுக்கவில்லை.
இன்னும் ஓரிரு மாதங்களில் 50 ஓவர் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது. சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவர் இந்திய அணியில் 4-வது வீரராக இறக்கப்படலாம். அண்மையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆர்.பி.சிங் இதனைத் தெரிவித்திருந்தார். ஜியோ சினிமா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்திய அணி 4-வது இடத்தில் சூர்யகுமார் யாதவை களமிறக்கலாம் எனவும், சூர்யகுமார் யாதவ் அவரது பேட்டிங்கை ஒருநாள் போட்டிக்கு ஏற்றவாறு சிறிது மாற்றம் செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ் முதல் போட்டியில் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இன்னும், இரண்டு போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் சூர்யகுமார் யாதவ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவருக்கான வாய்ப்பாக இதனை பயன்படுத்திக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதுவரை 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் 452 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 23.79 ஆகும். ஒருநாள் போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 64 என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.