உலகக் கோப்பை இறுதிப்போட்டியை இந்திய ரசிகர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் எனப் பலரும் கண்டுகளித்து வருகின்றனர்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்து வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான இந்தப் போட்டியை இந்திய ரசிகர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் கண்டுகளித்து வருகின்றனர். அந்த வரிசையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மற்றும் அவரது கணவர் ரன்வீர் சிங் இணைந்துள்ளனர்.
அகமதாபாதில் நடைபெறும் போட்டியைக் காண வந்த இருவரும் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்திருந்தனர். அவர்கள் விமான நிலையத்தில் இருந்து வரும் விடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் தீபிகா படுகோன் அவரது தந்தையுடன் வருவது பதிவாகியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இந்த இறுதிப்போட்டியை காண மேலும் பல பிரபலங்கள் வருகை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.