அழுத்தமான சூழலில் பதற்றமின்றி செயல்படுவதை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியிடமிருந்து கற்றுக் கொண்டதாக இந்திய வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று (நவம்பர் 23) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 209 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 80 ரன்களும், இஷான் கிஷன் 58 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: இவரைப் போன்று பந்துவீசியவரை பார்த்ததே இல்லை: மார்னஸ் லபுஷேன்
இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார். அதிரடியாக விளையாடிய அவர் 14 பந்துகளில் 22 ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் கடைசிப் பந்தை சிக்ஸருக்கு விளாசி இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார் ரிங்கு சிங்.
இந்த நிலையில், அழுத்தமான சூழலில் பதற்றமின்றி செயல்படுவதை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியிடமிருந்து கற்றுக் கொண்டதாக இந்திய வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியிருப்பதாவது: அழுத்தமான சூழலில் பதற்றமின்றி அமைதியாக இருப்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் ஆலோசித்துள்ளேன். அதிலும் குறிப்பாக, ஆட்டத்தின் இறுதி ஓவரில் எப்படி பதற்றமாகாமல் இருப்பது என்பது குறித்தும் பேசியுள்ளேன்.
நம்மால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு அமைதியாக இருக்க வேண்டும். நேராக நேர்மறையான சிந்தனையுடன் பந்துவீச்சாளரைப் பார்க்க முயற்சிக்க வேண்டும். அப்படி செய்வதுதான் போட்டியில் நான் பதற்றமின்றி இருப்பதற்கு காரணம் என தோனி கூறினார் என்றார்.