டெல்லி டேர்டெவில்ஸ் அணி தனக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றத் தவறியதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இணைவதற்கு முன்பாக ஏபி டி வில்லியர்ஸ் ஐபிஎல் தொடரின் முதல் மூன்று சீசன்களில் டெல்லி டேர்டெவில்ஸ் (டெல்லி கேப்பிட்டல்ஸ்) அணிக்காக விளையாடினார். அதன்பின், ஐபிஎல் ஏலத்தில் பெங்களூரு அணியால் வாங்கப்பட்ட டி வில்லியர்ஸ் தொடர்ச்சியாக பெங்களூரு அணிக்காக விளையாடி வந்தார்.
இதையும் படிக்க: டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற உகாண்டா!
இந்த நிலையில், டெல்லி டேர்டெவில்ஸ் அணி தனக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றத் தவறியதாக ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் டி வில்லியர்ஸ் கூறியிருப்பதாவது: நான் கடந்த 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தபோது, டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்வாகத்திடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்போது நிர்வாகத்தின் தரப்பிலிருந்து அடுத்த சீசனுக்காக டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் உங்களைத் தக்கவைக்கப் போகிறோம் என்றார்கள். அந்த சந்திப்பின்போது டேவிட் வார்னர் எனக்கு அருகே அமர்ந்திருந்தார். ஆனால், ஒரு வாரத்துக்குப் பிறகு நான் அணியிலிருந்து விடுவிக்கப்படுவதாக வந்த அறிவிப்பைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அந்த அறிவிப்பு எனக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. அந்தக் காலக்கட்டத்தில் பெரிதாக தகவல் தொடர்பு வளர்ச்சி என்பது கிடையாது. இருந்தும், அந்த அறிவிப்பு எனக்கு நல்ல உணர்வுகளைக் கொடுக்கவில்லை.
நான் அந்த ஆண்டு (2010) ஐபிஎல் சீசனில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தேன். அதனால், எனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து சிறிது பதற்றமாக இருந்தேன். நிறைய சந்தேகங்கள் என்னைத் தொற்றிக் கொண்டது. ஆனால், சர்வதேசப் போட்டிகளில் அப்போது நான் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தேன். அதிர்ஷ்டவசமாக ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. நான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டேன். அது எனது கிரிக்கெட் பயணத்தை எப்போதும் நினைவுகூறும் விதமாக மாற்றியது என்றார்.