பாகிஸ்தான் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தும் வெற்றி பெற முடியவில்லை என அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா சஃபீக் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் பெங்களூருவில் நேற்று (அக்டோபர் 20) நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 62 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் பாகிஸ்தானுக்கு 368 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தனர். அந்த அணி 134 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான அப்துல்லா சஃபீக் மற்றும் இமாம் உல் ஹக் முறையே 64 ரன்கள் மற்றும் 70 ரன்கள் குவித்தனர். இருப்பினும், பாகிஸ்தான் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தும் வெற்றி பெற முடியவில்லை என அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா சஃபீக் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பிறந்தநாளில் சதம் விளாசிய வீரர்கள்!
இது குறித்து அவர் பேசியதாவது: ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடியது. நாங்கள் எங்களது முழு முயற்சியையும் அளித்தோம். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம். எங்களிடம் பேட்டிங்கும் சிறப்பாகவே இருந்தது. ஆனால், ஆட்டத்தின் மிடில் ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. அதில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்தப் போட்டியில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு இனி வரும் போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.