சிறப்பான ஃபார்முடன் அணிக்குத் திரும்புவதில் உறுதியாக இருந்தேன்: ஸ்ரேயாஸ் ஐயர்

போட்டி தனக்கு எதிராக இருப்பதாகவும், எப்போதும் நேர்மறையாக இருக்க வேண்டும் என தனக்குள் அடிக்கடி கூறிக் கொண்டதாகவும் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். 
சிறப்பான ஃபார்முடன் அணிக்குத் திரும்புவதில் உறுதியாக இருந்தேன்: ஸ்ரேயாஸ் ஐயர்
Published on
Updated on
1 min read

போட்டி தனக்கு எதிராக இருப்பதாகவும், எப்போதும் நேர்மறையாக இருக்க வேண்டும் என தனக்குள் அடிக்கடி கூறிக் கொண்டதாகவும் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். 

காயம் காரணமாக நீண்ட நாள்கள் அணியில் இடம்பெறாமலிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் அண்மையில் காயத்திலிருந்து குணமடைந்து அணிக்குத் திரும்பினார். ஆசியக் கோப்பை தொடரில் அவர் இந்திய அணியுடன் இணைந்தார். இருப்பினும், அவருக்கு முதுகுப் பிடிப்பு ஏற்பட்டதால் அவரால் ஆசியக் கோப்பையின் அனைத்துப் போட்டிகளிலும் விளையாட முடியவில்லை. ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் பேட் செய்த ஸ்ரேயாஸ் ஐயர் 9 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். அதன்பின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 3  ரன்னில் ரன் அவுட் ஆனார். அதனால், அவர் அடுத்த வாய்ப்புக்காக காத்திருந்தார். 

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசி அசத்தினார். அவர் 90 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ள ஸ்ரேயாஸ் ஐயர் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக சதம் விளாசியுள்ளது இந்திய அணிக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், போட்டி தனக்கு எதிராக இருப்பதாகவும், எப்போதும் நேர்மறையாக இருக்க வேண்டும் என தனக்குள் அடிக்கடி கூறிக் கொண்டதாகவும் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு அவர் பேசியதாவது: நான் மீண்டும் சிறப்பான ஃபார்முடன் அணிக்குத் திரும்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். முந்தைய போட்டிகளில் எனக்கு கிடைத்த தொடக்கத்தை பெரிய அளவிலான ரன்கள் குவிக்க பயன்படுத்திக் கொள்ள காத்திருந்தேன். ஆனால், இன்றுதான் (செப்டம்பர் 24) அந்த வாய்ப்பு கிடைத்தது. நேர்மையாக கூறவேண்டுமென்றால், நான் எனது திறமை மீது சந்தேகப்படவில்லை. ஏனென்றால், நான் வலைப்பயிற்சியில் சிறப்பாக பேட்டிங் பயிற்சி மேற்கொண்டேன்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் எனக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. நான் எனது திறமை மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். போட்டிகள் எனக்கு எதிராக இருப்பதாக எனக்கு நானே எனக்கு கூறிக் கொண்டேன். எப்போதும் நேர்மறையாக இருக்க வேண்டும் எனவும் கூறிக் கொண்டேன். அது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாட உதவியது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com