காயம் காரணமாக ஒருநாள் உலகக் கோப்பை (2023) கிரிக்கெட் போட்டி, ஐபிஎல் உள்பட பல போட்டிகளில் இங்கிலாந்தின் பிரபல வேகப் பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாடவில்லை.
சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஆர்ச்சர் விடுவிக்கப்பட்டார். 2022இல் ரூ.8 கோடி ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆர்ச்சர் மும்பை அணிக்கு ஒழுங்காக விளையாடவில்லை. காயம் காரணமாக மோசமான பங்களிப்பினையே அளித்தார்.
28 வயதான ஆர்ச்சர் 2024இல் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ளதால் அவரது வேலைப் பளுவைக் குறைக்க ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
11 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாட வருகிறார். மே.22இல் பாகிஸ்தானுக்கு எதிராக தொடங்கும் டி20 தொடரில் ஆர்ச்சர் பங்கேற்க உள்ளார். 2021 முதல் காயம் காரணமாக அவதிபடுகிறார் ஆர்ச்சர். பின்னர் குணமாகி வந்த ஆர்ச்சர் மே.2022இல் மீண்டும் காயத்துக்கு உள்ளானார். 2023இல் ஐபிஎல் போட்டிகளில் 6 போட்டிகளில் விளையாடி பின்வாங்கிக் கொண்டார்.
டி20 உலகக் கோப்பையில் ஜூன் 4இல் இங்கிலாந்து அணிக்கு ஸ்காட்லாந்துடன் முதல் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குனர் ராப் கீ கூறியதாவது:
கரீபியனில் சில க்ளப் போட்டிகள் விளையாடிவிட்டு தற்போதுதான் இங்கிலாந்துக்கு திரும்பியுள்ளார் ஆர்ச்சர். டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதே முக்கியமானது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ஆர்ச்சர் பங்கேற்பார் என நம்புகிறேன். ஆனால் இது எல்லாமே அந்த நேரத்தில் ஜோஃப்ராவை பொருத்தது.
இந்தியாவுடனான டெஸ்ட் போட்டி, ஆஷஸ் என டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஆர்ச்சர் பங்கேற்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. மெதுவாக அவரை அனைத்து வடிவலான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க வைக்க வேண்டும் என்றார்.