இந்திய அணித் தேர்வுக்குழு உறுப்பினர்கள் சரியான முடிவுகளை மேற்கொண்டால், டி20 உலகக் கோப்பையில் இந்தியாவால் சிறப்பாக செயல்பட முடியும் என இங்கிலாந்து அணியின் டேவிட் மலான் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய இந்திய வீரர்கள் உருவாகி வருவதைப் பார்க்க முடிகிறது. இளம் வீரர்கள் பலர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினர்கள் சரியான முடிவுகளை எடுத்து அணியைத் தேர்வு செய்தால், டி20 உலகக் கோப்பையில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். டி20 போட்டிகளில் விளையாடாமலிருந்தபோதிலும், நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் ஆட்டம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெறுவதற்கு அவர் கடும் போட்டியாளராக உள்ளார் என்றார்.
36 வயதாகும் டேவிட் மலான் கடந்த ஆண்டு உலகக் கோப்பையின்போது இங்கிலாந்து அணிக்காக கடைசியாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.