
பாரீஸ் ஒலிம்பிக் தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்திய வீரர், வீராங்கனைகள் தாயகம் திரும்பி வருகின்றனர்.
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற அமன் ஷெராவத்துடன், பாரீஸிலிருந்து புறப்பட்டுள்ள இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் நாளை (ஆக. 13) காலை இந்தியாவுக்கு வருகிறார்.
நாளை காலை 10.30 மணிக்கு தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இறங்குகிறார்.
2024 ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வினேஷ் போகத், பாரீஸில் உள்ள இந்திய இல்லத்திலிருந்து திங்கள் கிழமை (ஆக. 12) புறப்பட்டதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாளை காலை அவர் இந்தியாவுக்கு வருகைத்தரவுள்ளது உறுதியாகியுள்ளது.
ஒலிம்பிக் தொடரில் காலிறுதி, அரையிறுதியில் சிறப்பான ஆட்டத்தை வழங்கிய வினேஷ் போகத், 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததற்காக இறுதிப்போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்துக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு எழுந்தது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு பிரபலங்கள் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.
இதனிடையே ஒலிம்பிக் இறுதிப்போட்டி தகுதிநீக்கத்துக்கு எதிராக சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என அவர் முறையிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்துள்ள மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இறுதித்தீர்ப்பு வழங்குவதற்கான கால அவகாசத்தை செவ்வாய்க்கிழமை (ஆக. 13) வரை சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.