மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதற்கான காரணத்தை அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மார்க் பௌச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் ஐபிஎல் மினி ஏலம் துபையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர். குஜராத் டைட்டன்ஸ் அணியை ஹார்திக் பாண்டியா கேப்டனாக வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பினார். மேலும், அந்த அணியின் கேப்டனாகவும் ஹார்திக் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதற்கான காரணத்தை அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மார்க் பௌச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஹார்திக் பாண்டியாவை மும்பை இந்தியன் அணிக்கு ஒரு வீரராகவே மீண்டும் வாங்கினோம். அதன்பின், அவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரோஹித் சர்மாவின் பங்களிப்பு ஒரு பேட்ஸ்மேனாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேவைப்படுகிறது. அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். கேப்டன் என்கிற பொறுப்பு இல்லையெனில் அவர் பேட்டிங்கில் மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக மும்பை இந்தியன் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட ரோஹித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாக பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறினார்.
இதையும் படிக்க: அணியில் இடம்பெற இஷான் கிஷன் இதனை செய்ய வேண்டும்: ராகுல் டிராவிட்
இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் அவர் மீது அழுத்தம் இருக்கும். ஆனால், ஐபிஎல் தொடரில் அவர் எந்தவித அழுத்தமுமின்றி மகிழ்ச்சியுடன் விளையாடுவதை நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் உணர்ச்சிவசப் படுகிறார்கள். இதனை ஒரு கிரிக்கெட் முடிவு என அவர்கள் புரிந்துகொள்ள தவறுகிறார்கள். இந்த முடிவின் மூலம் ரோஹித் சர்மா தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்புகிறேன் என்றார்.