இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் விளையாட எப்போதும் ஆர்வமாக இருந்ததாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் அபார பந்துவீச்சுத் திறமையை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இந்தப் போட்டிக்குப் பிறகு ஐசிசியின் டெஸ்ட் போட்டிக்கான சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையிலும் முதலிடம் பிடித்து அசத்தினார். டெஸ்ட் தரவரிசையில் இந்திய பந்துவீச்சாளர் ஒருவர் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும். தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்த பும்ராவுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் விளையாட எப்போதும் ஆர்வமாக இருந்ததாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ராவிடம் முதல் முறையாக பேசியது எனக்கு ஞாபகமிருக்கிறது. அப்போது நான் கொல்கத்தாவில் இருந்தேன். டெஸ்ட் போட்டிகள் விளையாட உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா எனக் கேட்டேன். அதற்கு பதிலளித்த பும்ரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் நாள் என்னுடைய வாழ்நாளின் மிகப் பெரிய நாள் என பதிலளித்தார். அவர் வெள்ளைப் பந்து போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துபவர் என்ற பெயர் உருவாகிவிட்டது. அவரிடம் கேட்காமலே அந்தப் பெயர் அவருக்கு உருவாகிவிட்டது. ஆனால், அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாட எந்த அளவுக்கு ஆர்வமாக இருந்தார் என்பது எனக்குத் தெரியும். டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தயாராக இருங்கள் என அவரிடம் நான் கூறினேன். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற உற்சாகமும், ஆர்வமும் அவரிடம் அதிகமாக இருந்தது என்றார்.
இதையும் படிக்க: ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் ஷமர் ஜோசப்: எந்த அணியில் தெரியுமா?
கடந்த 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் பும்ரா அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.