காஷ்மீரில் உள்ள பேட் தயாரிக்கும் ஆலைக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் குடும்பத்தினருடன் சென்றது அங்குள்ளவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் அவரது மனைவி அஞ்சலி மற்றும் மகள் சாராவுடன் காஷ்மீருக்கு சென்றுள்ளார். அவர்கள் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது காரை இடையில் நிறுத்தி பேட் தயாரிக்கும் ஆலையை பார்வையிட்டனர்.
சச்சின் டெண்டுல்கர் வருகை குறித்து கடையின் உரிமையாளர் கூறியதாவது: நாங்கள் பேட் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வேலை செய்து கொண்டிருந்தோம். திடீரென ஒரு வாகனம் எங்களது கடையின் முன்பு வந்து நின்றது. அந்த காரிலிருந்து சச்சின் மற்றும் அவரது குடும்பத்தினர் இறங்கியதைப் பார்த்தவுடன் எங்களுக்கு ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.
நாங்கள் தயாரிக்கும் பேட்டின் தரத்தினை அவர் பரிசோதித்தார். அவருக்கு நாங்கள் தயாரிக்கும் பேட்டின் தரம் பிடித்திருந்தது. உள்ளூர் வில்லோ மரங்களால் உருவாக்கப்படும் பேட்டுகளுக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என அவரிடம் வேண்டுகோள் வைத்தோம். உள்ளூர் பேட்டுகளை ஊக்குவிப்பதாக அவரும் எங்களுக்கு உறுதியளித்தார் என்றார்.