டெஸ்ட் கிரிக்கெட் கடினமானது, ஆனால்...மனம் திறந்த ஜெய்ஸ்வால்!
டெஸ்ட் கிரிக்கெட் கடினமானதாக இருந்தாலும் நல்ல தொடக்கம் கிடைத்தால் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியும் என நம்புவதாக இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்தை 434 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசி அசத்தினார்.
இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் கடினமானதாக இருந்தாலும் நல்ல தொடக்கம் கிடைத்தால் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியும் என நம்புவதாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டெஸ்ட் கிரிக்கெட் கடினமானது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் இடத்தில் இருக்கும்போது நான் எனது 100 சதவிகித உழைப்பை கொடுக்க வேண்டும். அதற்காக நான் முயற்சித்து வருகிறேன். நல்ல தொடக்கம் கிடைத்து விளையாட ஆரம்பித்தவுடன் அதனை பெரிய ரன்களாக மாற்ற நான் முயற்சிக்கிறேன். ஏனென்றால், டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல தொடக்கம் கிடைத்து சிறப்பாக விளையாடினால் அதனை பெரிய ஸ்கோராக மாற்ற வேண்டும். ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் சிறப்பான ஆட்டம் எனக்கு உந்துசக்தியாக அமைந்தது என்றார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி 23 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.