முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், மாற்றுத்திறனாளி கிரிக்கெட்டர் ஆமிர் ஹொசைனைச் சந்தித்தார்.
சமீபத்தில் இரு கைகள் இல்லாத 34 வயதான மாற்றுத்திறனாளி ஒருவர் கழுத்தினை வைத்து பேட்டிங்கும் கால்களை வைத்து பந்து வீச்சும் செய்து அசத்தினார்.
இந்த விடியோ வைரலானதைத் தொடர்ந்து சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில், “முடியாததை முடித்து காட்டியிருக்கிறார் ஆமிர். இதைப் பார்க்கும்போது மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன். விளையாட்டின்மீது அவருக்கு இருக்கும் ஆர்வமும் அர்ப்பணிப்பும் அதிகம். ஒருநாள் அவரைச் சந்தித்து அவரிடம் இருந்து ஜெர்ஸி வாங்குவேன். விளையாட்டின் மீது ஆர்வமாக இருக்கும் பல லட்சக்கணக்கானவர்களை ஊக்கப்படுத்தியிருக்கிறார்” எனக் கூறியிருந்தார்.
2013 முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறார் ஆமிர் ஹொசைன். 8 வயதாக இருக்கும்போது தனது தந்தையின் தொழிற்சாலையில் விபத்தின் காரணமாக இரு கைகளையும் இழந்துவிட்டிருக்கிறார்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் சென்ற சச்சின், ஆமிரை சந்தித்து தனது கையெழுத்திட்ட பேட்டினை பரிசளித்துள்ளார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சச்சின், “ஆமிரைச் சந்தித்தேன். உண்மையான நாயகன் இவர்தான். மேலும் எங்களை ஊக்கப்படுத்துங்கள். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.